கோவை : கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க மருத்துவமனையும், காவல்துறையும் தாமதப்படுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை : கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க மருத்துவமனையும், காவல்துறையும் தாமதப்படுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் துடியலூர் சிறுமியின் குடும்பத்தினருக்கு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பணியில் இருந்து விலகிய ஆசிரியை சபரிமாலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும், சிறுமியின் தங்கைக்கு சபரிமாலாவின் மகன் ஜெயசோழன் பொம்மை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, ஆசிரியை சபரிமாலா செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க சட்டங்களை கடுமையாக்கினால் மட்டும் போதாது. பள்ளிகளில் 10 வயது முதலில் இருந்தே பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும். ஆண் குழந்தைகளின் பெற்றோர்கள், இதுபோன்ற விவகாரத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். பலரிடம் பெற்ற உதவிகளின் அடிப்படையில் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு, சிறுமியின் தங்கைக்கு உரிய கல்வி உள்ளிட்டவற்றை வழங்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

தொடர்ந்து, சிறுமியின் தாய் பேசுகையில், “மகளின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காமல் காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் அலைகழிக்கின்றனர். சில பத்திரிகைகளில் குழந்தை தொடர்பாக தவறான மோசமான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது தங்களுக்கு வேதனை அளிக்கிறது, என வருத்தம் தெரிவித்தார்.