கோவை : கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை : கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை பன்னிமடை அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றவாளி மீது அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதேபோல, கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாரை மக்கள் முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் பொதுவெளியில் பேசப்பட்டு வந்தது. இதனால், குற்றவாளி சந்தோஷ் குமார் மீது பொதுமக்கள் எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படும் என்பதால், கைது செய்யப்பட்டதிலிருந்து நீதிபதி முன் ஆஜர்படுத்துவதில் இருந்து சிறை செல்வது வரை போலீசார் ரகசியமாக அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் திடீரென கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சட்ட மருத்துவத்துறை ஆய்வகத்திற்கு சந்தோஷ் குமாரை போலீசார் மரபணு பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த நபர்கள் சந்தோஷ்குமார் வெளியில் வரும்பொழுது தாக்குதல் நடத்தினர். அப்போது, அவர்களிடம் இருந்து போலீசார் சந்தோஷ் குமாரை பாதுகாப்புபடுத்தி வேகவேகமாக ஜீப்பில் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், குற்றவாளி மீது தாக்குதல் நடத்திய ஜலாலுதீன், நசீர், பன்னா அபு ஆகியோர் மீது பந்தய சாலை காவல் நிலையத்தில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.