திருப்பூர் : ஆஸ்திரேலியாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 5.65 லட்சம் மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : ஆஸ்திரேலியாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 5.65 லட்சம் மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரை அணுகிய நரேஷ், விஜய் என்ற இருவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டங்களில் நிறைய வேலை உள்ளதாகவும், மாதம் 90 ஆயிரம் ருபாய் சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்கள். மேலும், அங்கு செல்ல வீசா, பயண கட்டணம், கமிஷன் என 1 லட்சத்து 85 ஆயிரம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், மலேசியாவை சேர்ந்த அருள் என்பவரையும் அறிமுகப்படுத்தி அவர் மூலமாகத்தான் ஆஸ்திரேலியா அனுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனால், கடந்த 2012ம் ஆண்டு ரமேஷ், ஒரு லட்சத்து 85 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து, ரமேஷை சென்னை அழைத்து சென்ற இருவரும் சுற்றுலா விசாவை கொடுத்துள்ளனர். இதில், சந்தேகமடைந்த ரமேஷ், மற்றவர்களிடம் விசாரித்த போது, முன்னதாக இவர்கள் மலேசியா அனுப்பிய ரகுபதி என்பவரை போலீசார் பிடித்து விட்டதாக தகவல் கிடைத்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து நரேஷ் மற்றும் விஜயிடம் விசாரித்த போது, நேரடியாக பணி விசாவில் அனுப்ப தாமதமாகும் என்பதாலேயே இப்படி செய்ததாகவும், நீங்கள் பொறுத்தால் நேரடி விசா மூலமே அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதன்பிறகு, தொடர்ந்து ரமேஷை இருவரும் அலைகழித்து வந்த நிலையில், ராஜேஷ் என்பவரிடம் ரூ. 1.90 லட்சமும், அதே போல ராக்கியாபாளையத்தை சேர்ந்த ரகுபதி என்பவரிடம் ரூ. 1.90 லட்சம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரமேஷ் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நரேஷை கைது செய்தனர். மேலும், இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.