கோவை : சூலூர் தொகுதி உள்பட 21 தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தினால், தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்பதை தடுக்கவே சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளதாக கோவையில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை : சூலூர் தொகுதி உள்பட 21 தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தினால், தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்பதை தடுக்கவே சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளதாக கோவையில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்று பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதாவது :- வெற்றி விழா கூட்டம் போல் கோவை பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மோடியின் தலைமையிலான பாசிச ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற கருத்துடன் நாம் எதிர்கொள்ளும் தேர்தல். கலைஞர் இல்லாமல் சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல். இருந்திருந்தால் அவர்தான் இந்த மேடையில் உரையாற்றியிருப்பார். 'கர கர குரலில் என் உயிரும் மேலான' என அழைக்கும் கலைஞரின் மகனாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். அரசியலில் லாபங்களுக்காக சேர்ந்தவர்கள் இல்லை. நம் கூட்டணி கட்சியினர் கொள்கை அடிப்படையில் கூடியவர்கள். இது, கொள்கைக்காக அமைந்த கூட்டணி, நமது எதிர் அணியினரோ கொள்ளைக்கார கூட்டணி.
நேற்று வரை ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டவர்கள், இன்று அரசியல் லாபத்திற்காக சேர்ந்துள்ளனர். அவர்கள் நடத்திய பேரங்களை மக்கள் கவனித்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களாக பாதி தமிழகத்தை சுற்றிவந்துவிட்டேன். மக்கள் நமது கூட்டணிக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இடைத்தேர்தலிலும் வெற்றி பெற போகிறோம். 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாததன் பின்னணியில் சதி உள்ளது. நீதிமன்ற வழக்கு இருக்கிறது. ஆனால், தடை கிடையாது. அங்குதான் சூழ்ச்சி உள்ளது.
சூலூர் தொகுதி சேர்த்து 21 தொகுதியில் தேர்தல் நடத்தினால், தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்பதை தடுக்கவே சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் சொந்தமான இடங்களில் வரிமானவரிதுறை சோதனை செய்து, அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தினர். கைப்பற்றப்பட்ட பணம் அவர்களுடையது என்று பொய்யான தகவல் பரப்பி, அந்த தொகுதியிலும் தேர்தல் நிறுத்த முயற்சி செய்கின்றனர். 22 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க முறையீட்டு வருகிறது. காவல்துறையினரின் புகார் அடிப்படையில் வருமானவரித் துறை சோதனை செய்ததாக சொல்கிறது. நான் இந்த மேடையில் நின்று சொல்கிறேன், மோடி, எடப்பாடி, ஓ.பி.எஸ். வீடுகளில் கோடி கோடியாக பணம் உள்ளது. அவர்கள் வீட்டில் சோதனை நடத்துவீர்களா..?.
கொங்கு மண்டலத்தில் எந்த அரசு பணி மேற்கொள்ளப்பட்டாலும், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பணம் செல்கிறது. பா.ஜ.க. ஆட்சியிழக்கும் என்று மோடிக்கு உளவுப்பிரிவுகள் கூறிவிட்டன. தாமரை தமிழகத்தில் மலரவே மலராது. 'gobackmodi' என்று முதலில் கூறியவர்கள் தமிழகத்தில் தான். விவசாயம், பணமதிப்பிழப்பு, கருப்பு பண ஒழிப்பு என அனைத்திலும் தோல்வி. கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே நறைவேற்றப்படவில்லை. எளிமையின் சின்னம், வறுமையில் உள்ள மக்களுக்கு பணியாற்றுவதாக கூறி கார்ப்பரேட்டுகளுக்காக பணியாற்றி வருகிறார் மோடி.
மோடியின் ஆட்சி மீண்டும் வர வாய்ப்பில்லை. ஒருவேளை வந்துவிட்டால், இந்த தேசம் 50 ஆண்டுகாலம் பின்னோக்கி போய்விடும். அடுத்த தேர்தல் நடத்தப்படுமா..? என்பதே சந்தேகம். மதத்தின் பேரைச் சொல்லி ஆட்சியைப் பிடிக்க முயல்கின்றார். நாடு என்பது அனைவருக்கும் சொந்தமானது, மத வழிபாடு அவரவர்களை பொறுத்தது. மோடி ஒரு தத்துவத்தின் பிரதிநிதி, நாம் அதற்கு எதிரான தத்துவத்தின் பிரதிநிதிகள். அதனால், தான் நேரடியாக எதிர்க்கிறோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார்கள். ஆனால், நமக்கு என்றும் மோடி எதிரி தான். காரணம் அவர் கடைபிடிக்கும் கொள்கை. அவரோடு இருக்கும் எவரும் நமக்கு எதிரியே.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என எதிலும் முன்னேற்றமில்லை. மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவில் மதக்கலவரம் எங்குமே நடக்கவில்லை என்கிறார் கோவையின் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன். 2015-ல் 751, 2016 -ல் 743, 2017 -ல் 822 என தேசத்தில் கலவரங்கள் நடந்துள்ளன. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிக அளவு மதக்கலவரங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகிறது. ஆனால், பெரியாரின் மண்ணான தமிழகத்தில் ஒருவர் மட்டுமே மதக்கலவரத்தால் இறந்துள்ளார். இதை கலவர பூமியாக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. நாம் அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சமீபத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் 7 வருடமாக பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் சம்பாதிக்கும் கொடுமை நடந்துள்ளது. இதற்கு பின்னணியாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் சம்பந்தப்பட்டுள்ளார். இதுகுறித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையுள்ளது. என் மீது வீண் பழி சுமத்தும் வகையில், எடப்பாடி பேசி வருகிறார். அவர் எந்த பழி சுமத்தினாலும், சட்டரீதியாக எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்.
இவர்கள் மீது மக்களும் அதிருப்தியில் உள்ளனர். அதைதான் இந்த மகத்தான கூட்டம் உணர்த்துகிறது. நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெற வைப்பது உறுதியாகிவிட்டது, என ஸ்டாலின் கூறினார்.