கோவை : பெரு முதலாளிகள் மற்றும் பணம் படைத்தவர்களின் காவலாளியாக இருந்து வருவதால், பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தன்னை சவுகிதார் என குறிப்பிட்டிருப்பதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கோவை : பெரு முதலாளிகள் மற்றும் பணம் படைத்தவர்களின் காவலாளியாக இருந்து வருவதால், பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தன்னை சவுகிதார் என குறிப்பிட்டிருப்பதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது :- 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்த மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பல்வேறு வாக்குறுதிகள் அளித்து உள்ளது. ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லி உள்ளனர். நான் சவுகிதார் (மக்களின் காவலன்) என பிரதமர் மோடி டிவிட்டர், முகநூல் என போன்றவற்றில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க.வினர் நாங்களும் சவுகிதார் என கூறி வருகின்றனர். இவர்கள் பெரு முதலாளிகள் மற்றும் பணம் படைத்தவர்களின் காவலாளியாக இருந்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 48 முறை வெளிநாட்டிற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தப் பயணங்கள் ஏழை தொழிலாளி மக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்களா..?. இந்தப் பயணங்களின் போது பெரும் முதலாளிகளான அனில் அம்பானி, அதானி ஆகியோரை அழைத்து சென்று உள்ளார். பிரதமர் மோடி சாமானியனுக்குக் காவலாளி அல்ல.
ஒரு காலத்தில் கோவை மாவட்டம் சிறு, குறுந்தொழில்களின் முன்னோடி மிகுந்த மாவட்டமாக இருந்தது. ஆனால், தற்போது ஜி.எஸ்.டி. காரணமாக பெரும் பாதிப்பு எற்பட்டு தொழில்கள் நலிவடைந்து விட்டது. வர்த்தக நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக பிரதமர் மோடி மாறிவிட்டார். தற்போது, மோடி அரசு தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்து உள்ளது. கண்டெய்னரில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கே..?. வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார், என்றார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரசின் துணைத் தலைவருமான கந்தசாமி பேசுகையில், "நேற்று வெளியிடப்பட்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கையிலும், தி.மு.க.வின் அறிக்கையிலும் பல ஒருமித்த கருத்துகள் உள்ளன. குறிப்பாக, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என இரண்டு அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் கொடுமை நீட் தேர்வு. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்குக் கல்வி கடன் வழங்கப்படும். கோவையின் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும். விவசாயம், நெசவு, தொழிற்சாலைகள் என அனைத்தும் கோவையில் முடங்கியுள்ளது. இவற்றை மீட்டெடுக்கவும், அ.தி.மு.க.,வின் ஊழல் மணிகளை ஆட்சியில் இருந்து அகற்றவும், தி.மு.க கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்," எனக் கூறினார்.