திருப்பூர் : சிறிய விவசாயிகள் தங்கள் தேவைக்காக 1 கிராம் முதல் 5 சவரன் வரை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கடன் தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என திருப்பூரில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பூர் : சிறிய விவசாயிகள் தங்கள் தேவைக்காக 1 கிராம் முதல் 5 சவரன் வரை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கடன் தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என திருப்பூரில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருப்பூர் பெருமாநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது :- தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறதா..? என்ற கேள்வி எழுகிறது. தன்னாட்சி அமைப்புகளை மோடி வேலை ஆட்கள் போல நடத்துகிறார். துரைமுருகனின் வீடு, அலுவலகம், கல்லூரி என அனைத்து பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சோதனை நடந்த போது எதையும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால், ஒரு நாள் இடைவெளி விட்டு யாரோ ஒருவர் வீட்டில் பணத்தை எடுத்தார்கள். அதிகாரிகளே பணத்தை கொண்டு வந்து வைத்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள்.
தேர்தல் ஆணையம் மோடிக்கு ஆதரவாக போய்க்கொண்டிருந்தால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். மிரட்டுவதற்காக இதை சொல்லவில்லை, ஜனநாயகத்தைக் காப்பதற்காக ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போல, மோடிக்கு ஏற்ற பாடி, பாடிக்கு ஏற்ற மோடி. பாடி என்பது எடப்பாடி.
எடப்பாடி பழனிசாமியை மண்புழு என நான் கூறியதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார் பழனிசாமி. மண்புழுவா நீங்கள்..?. விவசாயிகளின் விஷப்புழு நீங்கள். மண்புழு என்றால் மண்ணிற்கு அடியில் தானே செல்ல வேண்டும். ஆனால், நீங்கள் சசிகலா காலில் தானே தவழ்ந்தீர்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, நிச்சயமாக தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பது மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். சிறிய விவசாயிகள் தங்கள் தேவைக்காக 1 கிராம் முதல் 5 சவரன் வரை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கடன் தொகையும் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.
இந்த அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும், என அவர் கூறினார். இந்தப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.