கோவை : மக்களவை தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக நடைபெற்ற தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 955 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை : மக்களவை தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக நடைபெற்ற தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 955 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு ஊழியர்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 746 பேருக்கு முதல்கட்ட தேர்தல் பயிற்சி கடந்த மார்ச் 24-ம் தேதி அளிக்கப்பட்டது. அன்றைய தினம் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு ஊழியர்கள் 955 பேர் பயிற்சிக்கு வரவில்லை. மேலும், அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்களிடம் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டிஸ் அனுப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
கோவை மாவட்டம் முழுவதும் 3,072 வாக்குச்சாவடிகளில், பணிகளில் ஈடுபட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இதனிடையே, தேர்தல் பணியில் ஈடுபட 14,746 அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த மார்ச் 24-ம் தேதி உதவி தேர்தல் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் தகுதியுடைய அதிகாரிகளின் தலைமையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு மையங்களிலும் முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில், 955 பேர் பங்கேற்கவில்லை. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கர்ப்பினி பெண்கள், மாற்றுதிறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆதாரங்களை சமர்பித்து தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெறலாம். மற்றவர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.
இராண்டாவது கட்ட பயிற்சி ஏப்ரல் 6 -ம் தேதியும் மற்றும் மூன்றாவது கட்ட பயிற்சி ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், வாக்குச்சாவடிகளில் உள்ள அலுவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு எவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் உள்ளிட்டவை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயிற்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பயிற்சி அளிக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.