நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
50 மில்லியன் குடும்பங்களின் வருவாய்க்கு வாக்குறுதியளிக்கும் காங்கிரஸ் நியாய் திட்டம், அதாவது குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம், மாதம் 6000 ரூபாய் குறித்து ராகுல் வெளியிட்ட திட்டம் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தி உள்ள சூழலில், இன்று தேர்தல் அறிக்கையை தலைமை கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்
முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார்.
இந்த நிகழ்வில் முன்னதாக, பேசிய ப. சிதம்பரம், ''வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனையில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம். முக்கியமாக விவசாயிகளின் கடன் குறித்து தேர்தல் அறிக்கை முக்கிய ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும்,'' என்று அவர் கூறினார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் :
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் (MNREGA) 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.
மத்திய அரசிலுள்ள 22 லட்ச காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்.
பொதுத் துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படும்.
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறை, கும்பல் கொலை உள்ளிட்ட வெறுப்பு குற்றங்கள் தடுக்கப்படும்.
2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.
2023 - 24ஆம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படும்.
காடுகளின் பரப்பளவை அதிகரிக்கச் சுதந்திரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்
வயநாட்டில் போட்டியிடுவது பற்றி விளக்கம் :
அப்போது, வயநாட்டில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி '' பிரதமர் நரேந்திர மோடி தங்களைப் புறக்கணித்து விட்டதாக தென்னிந்திய மக்கள் கருதுகின்றனர். ஆனால், நான் தென்னிந்திய மக்களுடன் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கே கேரளாவில் போட்டியிடுகிறேன். நீட் தேர்விற்குப் பதிலாக மாநில அளவில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம். மாநிலத்தின் விருப்பப்படி மருத்துவ மாணவர்கள் தேர்வு நடத்தப்படும், என்றும் அவர் கூறினார்.