கோவை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை தொகுதிக்கான மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன், தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை தொகுதிக்கான மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன், தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தேர்தல் தினம் நாளுக்கு நாள் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் ரேஸ்கோர்ஸ், துடியலூர் என அடுத்தடுத்து கோவையின் பல்வேறு முக்கிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இன்று காலை துடியலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், துடியலூரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார். மேலும், மக்கள் நீதி மய்யம் அதிகாரத்திற்கு வந்தால், குடிநீர் வசதி மற்றும் சுத்தமான பாதாள சாக்கடை வசதி உள்ளிட்டவை செய்து தரப்படும் என துடியலூர் மக்களிடம் வேட்பாளர் மகேந்திரன் தெரிவித்தார். அதோடு, 'கோவை 2024-ன் பார்வை' என்பது பற்றியும் அவர் விவரித்தார்.
மேலும், பேருந்து நிறுத்தம் மற்றும் சந்தைப் பகுதியின் அருகாமையில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்த அவர், மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், துடியலூர் சந்தையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, மாற்றத்தை உருவாக்க வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டனர். கோவையில் வரும் 5-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.