வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தி.மு.க. பிரமுகருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தி.மு.க. பிரமுகருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வேலூர் மாவட்டத்தின் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை என்பவருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் சட்ட விரோதமாக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் இன்று சிமெண்ட் குடோனில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் மூட்டை, மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு மூட்டையிலும் வார்டு எண்கள் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்ததால், அவை அரசியல் கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்தவை என்று தெரியவந்துள்ளது.
பணம் எண்ணுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தமாக ரூ.15 கோடி அளவில் பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெரிய அளவிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இது கண்டிப்பாக அரசியல் பிரபலத்தின் பணமாகத் தான் இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.
கடந்த 29, 30 ஆகிய தேதிகளில் தி.மு.க. பொருளாளா் துரைமுருகன் வீடு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்திய நிலையில், தற்போது மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அதற்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற நோக்கத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, வேலூரில் மேலும் சில பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.