நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் இன்று தொடங்கும் நிலையில், உதகை ரோஜா பூங்காவில் பூத்துள்ள பல வண்ண ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் இன்று தொடங்கும் நிலையில், உதகை ரோஜா பூங்காவில் பூத்துள்ள பல வண்ண ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

உதகை ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. ஆண்டுதோறும் கோடை சீசனின் போது, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காகவும், ரோஜா கண்காட்சி நடத்துவதற்காகவும் இப்பூங்கா பிப்ரவரி மாதம் முதலே தயார் செய்யப்படும். வழக்கம் போல், இம்முறையும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சில பாத்திகளில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டன. கடந்த மாதம் பூங்காவில் உள்ள பெரும்பாலான ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளன. அவைகளை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளில் தற்போது மலர்கள் பூத்துள்ளன. பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் இந்த ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.

தற்போது, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.
மேலும், இன்று முதல் கோடை சீசன் துவங்குகிறது. இதனால், கோடை சீசனுக்கு உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பல வண்ண ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கண்களுக்கு குளிர்ச்சியை தரும் வகையில் பூத்துள்ள இந்த ரோஜா மலர்களை காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.