கோவை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள் எனக் கூறி பொள்ளாச்சி தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் வாக்குசேகரித்தார்.
கோவை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள் எனக் கூறி பொள்ளாச்சி தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் வாக்குசேகரித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பொள்ளாச்சி தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பொள்ளாச்சியின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது :- பல்வேறு சிறப்புகளுக்குப் பெயர்பெற்ற பொள்ளாச்சியில் இந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஏழு வருடங்களாக காமுகர்கள் பெண்களுக்குப் பாலியல் கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர். இதில், ஆளுங்கட்சி பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். பல நூறுக்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கி அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்த கொடூரர்களை இந்த எடப்பாடி அரசு என்ன செய்தது..?. புகார் அளித்த பெண்ணின் தகவலை வெளியிடும் அளவிற்கு அநீதி இழைத்தது. பல காணொளிகளும் புகார் தர வரும் பெண்களை அஞ்சவைப்பதற்காகப் பரப்பப்பட்டன.
இங்கே இப்படி என்றால் மத்தியில் மோடி அரசு என்ன செய்தது ஆஃசீபா கொலையில்..?. இந்துத்துவாவின் வெறிக்கு பலியான ஆசிஃபாவுக்கு குறைந்தபட்ச நீதி கூட இந்த பாசிச மோடி அரசு வழங்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிக் கொல்லப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளது என்பது நெஞ்சங்களை பதற வைக்கிறது. அ.தி.மு.க., பா.ஜ.க. ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் பாலியல் இன்னல்களுக்கு உள்ளாவதும், கொலையாவதும் தினசரி செய்தியாகி விட்டது. இந்த எடப்பாடி அரசு பெண்கள் பாதுகாப்பிலும், குழந்தைகள் நலனிலும் மெத்தனமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகால ஆட்சியில் ஒரு கடுமையான நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.
அரசு மருத்துவமனைகள் கூட பெண்களை துச்சமாக நினைக்கின்றன. இந்த அ.தி.மு.க., ஆட்சியில் கவனக்குறைவால் நிகழ்ந்த மருத்துவமனை மரணங்கள் எத்தனை..?. எச்.ஐ.வி. தொற்று இருக்கும் இரத்தம் பரிசோதிக்கப்படாமல் கர்ப்பிணிகளுக்கு ஏற்றப்பட்டு, அவர்களது வாழ்க்கையை இருளாக்கியவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. கிருஷ்ணகிரியில் இரத்தவங்கியை ஒழுங்காகப் பராமரிக்காமல் கெட்டுப்போன இரத்தம் ஏற்றி பதினைந்து கர்ப்பிணிப் பெண்கள் இறந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. எவ்வளவு கொடூரம். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, இந்த அரசு பெண்கள் நலனிலும், மருத்துவநலனிலும் எந்த ஒரு அக்கறையும் இன்றி அலட்சியமாக இருந்து வருகிறது.
பெண்களின் வாழ்க்கையையும், குழந்தைகளையும் சீரழித்ததற்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல், இந்த அரசு என்ன பதில் பதில் சொல்லப்போகிறது. எனவே, பெண்கள் நலனை முதன்மையாகக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளைத் தடுத்து தி.மு.க.,வானது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். பாலியல் கொடுமைகளில் ஈடுபட்ட கொடூரர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தந்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திட வழிவகுக்கும். எனவே, வலிமை மிகுந்த வாக்குகளை தி.மு.க.வுக்கு கொடுக்க வேண்டும், என்று பேசினார்.
பிரச்சாரத்தின் போது, கோவை முன்னாள் அமைச்சர் மு. கண்ணப்பன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் கொங்கு நித்தியானந்தம், பொள்ளாச்சி தி.மு.க., நகரக் கழக பொறுப்பாளர் டாக்டர். வரதராஜ், இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சக்தி ஹோட்டல் காமராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்று வாக்குகள் சேகரித்தனர்.