கோவை : வடவள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 5 லட்சம் பணம் மற்றும் 2 ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை : வடவள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 5 லட்சம் பணம் மற்றும் 2 ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை வடக்கு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆய்வாளர் ஜோசப், தலைமை காவலர் ரங்கசாமி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வண்டியில் ரூ. 5 லட்சம் பணம் மற்றும் இரண்டு ஏர்கன்கள் இருந்தது.

இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த பணம் கணபதி பகுதியில் இருந்து இருட்டுபள்ளம் பகுதியில் உள்ள தனியார் வங்கி கிளைக்குக் கொண்டு செல்லப்படுவதாக வாகனத்தில் இருந்தவர்கள் கூறினர். உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தற்போது, அந்த பணத்திற்கான உரிய ஆவணத்தை வங்கி அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட ஏர்கன்கள் இரண்டும் உரிமம் பெறப்படாதவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.