கோவை : கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் விரிவான விசாரணைக்காக 10 தனிப்படைகளுடன் கூடுதல் போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோவை : கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் விரிவான விசாரணைக்காக 10 தனிப்படைகளுடன் கூடுதல் போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களின் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல, பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளி முடிந்து கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். மேலும், விடிய விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் கத்தியால் அறுபட்ட காயங்களோடு, சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, குற்றவாளிகளை பிடிக்க தாமதிப்பதைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியின் உடலை நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, தங்களது வீட்டின் அருகில் வசித்து வரும் விஜயகுமார், துரைராஜ், சந்தோஷ்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். இருப்பினும், 10 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் சந்தோஷ், துரை, சதிஷ், விஜயகுமார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, டி.எஸ்.பி. மணி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், துடியலூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மீனாம்பிகை உள்பட கூடுதலாக 4 ஆய்வாளர்கள், 2 ஏ.டி.எஸ்.பி.கள் ஆகியோர் வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தலைமையில் இந்த வழக்கு சம்மந்தமான கூட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் கூடுதலாக வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.