கோவை : கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கோவை : கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கும் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பல்வேறு வேட்பாளர்கள் 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராசாமணி இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையை நடத்தி, வேட்பாளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டார்.
அப்போது, இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது :- கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 38 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 15 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதேபோல, பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் 41 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 17 பேருடைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, என்றார்.
மேலும், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு நிராகரித்தது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- உறுதிமொழி ஆவணம் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. பொது தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் அனைத்து ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டியது மற்றும் குறைபாடுகள் குறித்து எழுத்து மூலமாக கொடுக்கப்பட்டு காலஅவகாசமும் வழங்கப்பட்டது. தெளிவான ஆய்வுக்குப் பின்னரே வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பொள்ளாச்சியில் ஒரு வழக்கும், கோவையில் மக்கள் நீதி மய்யம் அரசியல் நிகழ்விற்கு முன் அனுமதி இல்லாமல் இடம் அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
இதேபோல, கடலூரில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் நா. கார்த்திக்கின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.