கோவை : கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை, போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
கோவை : கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை, போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களின் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல, பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளி முடிந்து நேற்று வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். மேலும், விடிய விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் கத்தியால் அறுபட்ட காயங்களோடு, சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, குற்றவாளிகளை பிடிக்க தாமதிப்பதைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து, 10 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதனிடையே, குற்றாவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி சிறுமியின் உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்து வந்தனர். இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிறுமியின் பெற்றோரிடம் கோவை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர்.
பின்னர், போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்களிடமும் மற்றும் மாதர் சங்கத்தினர் இடமும் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் வீடியோக்களை காண்பித்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் இந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், காவல்துறையினர் அளித்த உறுதியின் பேரில், பெற்றோர் உடலை வாங்கிக் கொண்டனர்.