கோவை : தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவையில் தி.மு.க கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
கோவை : தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவையில் தி.மு.க கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
கோவை மற்றும் பொள்ளாச்சியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் பி.ஆர்.நடராஜன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- கடந்த 5, 6 நாட்களில் 5 தொகுதி மக்களை சந்தித்து தற்போது பொள்ளாச்சி தொகுதிக்கு வந்துள்ளேன். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம், இது மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல. மு.க.ஸ்டாலின் அலை. மோடியை வீட்டுக்கு அனுப்பும் முடிவை நீங்கள் எடுத்துள்ளீர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு பண மதிப்பிழப்பு செய்து, கருப்பு பணத்தை ஒழித்தாரா..?, பயங்கரவாதத்தை ஒழித்தாரா..?. புல்வாமா தாக்குதலில் 40 பேரை மோடி பலி வாங்கியுள்ளார். அது தான் பாதுகாப்பா..?. மோடிக்கு நாமம் போட வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா..?. ஜி.எஸ்.டி.யால் 10 கோடி பேருக்கு வேலை இழப்பை தந்துள்ளார். நீட் அனிதா மாணவியின் இறப்பை மறக்க முடியுமா..?. அந்த பாவம் மோடியையும், ஓ.பி.எஸ்.யையும் சும்மா விடாது.
நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி, கேஸ் விலை குறைப்பு ஆகியவை தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்துள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கதாநாயன். வில்லன் மோடி, அவரது கைத்தடிகள் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., ஐந்தாண்டுகளாக நம்மை அவர்கள் வச்சு செஞ்சிருக்காங்க. அதனால், நாம் அவர்களை வச்சு செய்ய வேண்டும். இது அ.தி.மு.க. ஆட்சி இல்லை. அடிமை தி.மு.க., அனாதை தி.மு.க. ஆட்சி.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பேராசிரியை நிர்மலா தேவி, பொள்ளாச்சி சம்பவம் போன்றவற்றிற்கு பாடம் கற்பிக்க வேண்டும். இதற்கு மூல காரணம் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவின். இரண்டாண்டுகளுக்கு முன் நள்ளிரவில் அவரது காரிலிருந்து இளம்பெண் இறந்தார். தற்போது, புகார் கொடுத்த பெண்ணின் அண்ணன் தாக்கப்படுகிறார். அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும்.
அம்மா எப்படி இறந்தார் என சொன்னார்களா..?. ஓ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது விட்டு விட்டு, பதவி போனபின்பு தர்மயுத்தம் நடத்தியுள்ளார். தற்போது, அதையும் விட்டு விட்டு, ஈ.பி.எஸ் உடன் சேர்ந்து விட்டார். இது கேடு கெட்ட ஆட்சி. அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கலைஞரின் பேரனாக கேட்கிறேன், தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள், எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தினை ஆதரித்தும் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

நேற்று மட்டும் அவர் சூலூர் வெங்கிட்டாபுரத்தில் தொடங்கி செட்டிபாளையம், வடசித்தூர், நெகமம், பெதப்பமபட்டி, கணியூர், கொமரலிங்கம், தேவனூர் புதூர், சுங்கம், ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி உள்ளிட்ட இடங்களில் வாக்குகளை சேகரித்தார்.