ஈரோடு : அந்தியூர் வனப்பகுதி அருகே வாய்க்காலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த 4 மாத குட்டி யானையை மீட்டு, அதன் குடும்பத்திடம் சேர்த்த வனத்துறையினர் மற்றும் பழங்குடியினத்தவர்களின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஈரோடு : அந்தியூர் வனப்பகுதி அருகே வாய்க்காலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த 4 மாத குட்டி யானையை மீட்டு, அதன் குடும்பத்திடம் சேர்த்த வனத்துறையினர் மற்றும் பழங்குடியினத்தவர்களின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் வறட்டுப்பள்ளம் அணையின் முக்கிய வாய்க்கால் அருகே 4 மாத குட்டி யானையுடன் 2 யானைகள் வந்து கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக குட்டி யானை வாய்க்காலின் உள்ளே விழுந்தது. இதைத் தொடர்ந்து, யானையின் பிளிறல் சத்தத்தைக் கேட்டு வந்த வனக் கண்காணிப்பாளர் தர்மலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் பழங்குடியினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
பின்னர், குட்டி யானை மீட்க வனத்துறையினரும், பழங்குடியின மக்களும் வாய்க்காலில் இறங்கினர். ஆனால், அவர்களைக் கண்டு மிரண்ட குட்டி யானை அங்கும், இங்குமாய் ஓடிக் கொண்டே இருந்தது. அதோடு, குட்டியின் பிளிறல் சத்தத்தைக் கேட்டு, வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் மீண்டும் வாய்க்கால் அருகே வந்தது. இருப்பினும், சிறிது போராட்டத்திற்குப் பிறகு, குட்டி யானை வாய்க்காலில் இருந்து வெளியேற்றப்பட்டது. பின்னர், அது அங்கிருந்தவர்களை துரத்தியது.

வாய்க்காலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த 4 மாத குட்டி யானையை மீட்டு, மீண்டும் அதன் குடும்பத்திடம் சேர்த்த வனத்துறையினர் மற்றும் பழங்குடியின மக்களின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.