கோவை : சிறு, குறு தொழில்களை காப்பாற்றும் வகையில், ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி.யை முழுமையாக ரத்து செய்யப்படும் என கோவை தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் உறுதியளித்துள்ளார்.
கோவை : சிறு, குறு தொழில்களை காப்பாற்றும் வகையில், ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி.யை முழுமையாக ரத்து செய்யப்படும் என கோவை தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் உறுதியளித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளருமான ராசாமணியிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், பி.ஆர். நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- கோவை மாவட்டத்தின் அமைதி வேட்பாளராக தான் போட்டியிடுகிறேன். உலக அளவில் பம்ப் உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவை தொழில் தற்போது நசுங்கி உள்ளது. 50 ஆயிரம் தொழிற்சாலைகளும், 5 லட்சம் தொழிலாளர்களும் தமிழகத்தில் வேலை இழந்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிறு, குறு தொழில்களை காக்க ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டியை முழுமையாக ரத்து செய்வோம்.
குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரை வார்ப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். மக்களுக்கு குறைந்த விலையில் தரமான குடிநீரை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்கள் விவசாயிகளிடம் எடுக்கப்படுவது தடுக்கப்படும். இயற்கை வழங்கிய கொடையான மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட வேண்டும். விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தனி நபர் சார்ந்த பிரச்சனை அல்ல, என்றார்.
மேலும், விதிமுறைகள் மீறி பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, "பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு செல்வோம். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் உயிரிழந்த இளம்பெண்களின் மரணங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், என பி.ஆர். நடராஜன் தெரிவித்தார்.