கோவை : மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு பணியாளர்களுக்கு இன்று தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை : மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு பணியாளர்களுக்கு இன்று தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதி வாரியாக கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் நியமன உத்தரவு நேரிடையாக துறை தலைமை அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் மாவட்டம் முழுவதும் 14 ஆயிரத்து 746 பேர் கலந்துகொண்டனர்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு நிர்மலா மகளிர் கல்லூரியில் தேர்தல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டனர். இந்த மையத்தில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு பணியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

அதன் பின் நிருபர்களிடம் ஆட்சியர் ராசாமணி கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது. அதேபோல், பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த உடுமலை மற்றும் மடத்துகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று பயிற்சி மையங்களில் பயிற்சி நடைபெறுகிறது. கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியிலும் பயிற்சி நடைபெறுகிறது.
மாவட்டம் முழுவதும் 3,072 வாக்குச்சாவடிகளில் பணிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான முதல் கட்ட பயிற்சி உதவி தேர்தல் அலுவலர், துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இராண்டாவது கட்ட பயிற்சி ஏப்ரல் 6 மற்றும் மூன்றாவது கட்ட பயிற்சி ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலை பொறுத்தவரையில் நியாயமாக, முறையாக நடைபெறும். அதற்காக கண்காணிப்பு அலுவலவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பறக்கும் படையினர் முலமாக கோவையில் ரூ. 1 .5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 44 லட்சம் ரூபாய் அந்நிய கரென்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் வாகனத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சென்னை மற்றும் இங்குள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் கண்காணிக்க முடியும்.
வாக்காளர்கள் புகார்களை பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் செலவு கணக்குகளை பார்வையிட ஏப்ரல் 18-ம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கு 4 பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் ஏப்ரல் 03-ம் தேதி வர உள்ளனர். நாளை இரண்டு பொது தேர்தல் பார்வையாளர்கள் வர உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக 15 சதவீதம் இருப்பு வைத்துள்ளோம். தேர்தல் பணியாளர்களும் கூடுதலாக உள்ளனர்.
கோவை பேரூர் பகுதியில் செல்லப்பன் கவுண்டன்புதூர் மக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 மற்றும் 19 வயது புதிய வாக்காளர்களை வாக்கு பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் அனைவரும் வாக்களிக்க வணிக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். கடந்த ஆண்டினை விட இந்தாண்டு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.

ஒவ்வொரு பயிற்சி மையங்களிலும் மண்டல அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில், வாக்குச்சாவடிகளில் உள்ள அலுவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு எவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் உள்ளிட்டவை பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி மையங்கள் விவரம் :
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆர்.வீ.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலாஜி, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.