கோவை : மக்களவை தேர்தலின் மூலம் அரசியலுக்குள் நுழையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வரும் தேர்தலில் கோவையில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை : மக்களவை தேர்தலின் மூலம் அரசியலுக்குள் நுழையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வரும் தேர்தலில் கோவையில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சியுடன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்தநிலையில், மக்களவை தேர்தலுக்கான 21 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி நேற்று வெளியிட்டது. எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், 18 இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களும் 2-வது கட்டமாக வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கட்சியின் தலைவர் எந்தக் தொகுதி போட்டியிடுவார் என அக்கட்சி தொண்டர்களும், ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தென் சென்னை தொகுதி அல்லது அவரது பிறந்த ஊரான ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டு வந்தது.
ஆனால், முதல்முறையாக அரசியலுக்குள் நுழையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வரும் தேர்தலில் கோவையில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல, கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் களமிறக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 3 அல்லது 4 முறை கோவை மற்றும் பொள்ளாச்சிக்கு கமல்ஹாசன் வருகை புரிந்து, பல்வேறு முக்கிய நபர்களை சந்தித்து இருப்பது இதன் கண்ணோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டம் மிக முக்கியமானதாகும். கடந்த இரண்டு தேர்தல்களின் வெற்றியை தீர்மானிக்கும் தொகுதியாகவும் இருந்துள்ளது. இந்த நிலையில், கோவையில் இரு முக்கியக் கட்சிகளான அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சியான பா.ஜ.க.வையும், தி.மு.க. தனது கூட்டணியில் அங்கம் வகைக்கும் சி.பி.ஐ. (எம்) கட்சியின் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் களமிறங்கினால் பலத்த போட்டி ஏற்படும்.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் பா.ஜ.க.வின் 2-வது அணி என்றும், கமல்ஹாசன் இடதுசாரியை சேர்ந்தவர் எனவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், கமல்ஹாசன் கோவையில் போட்டியிட்டால், இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமையும்.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றினாலும், அடிப்படை தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் நிலைதான் கோவை மாவட்டத்திற்கு உள்ளது. சீரான குடிநீர் வசதி, சர்வதேச சரக்கு விமானப் போக்குவரத்து சேவை, விவசாயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை, நொய்யல் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் மீட்டெடுப்பது, மனித - விலங்குகள் மோதலை தடுக்கும் அறிவியல் தீர்வு, மோசமான பிரதிநிதிகளினால் போடப்படும் தரமற்ற சாலைகள், மந்தமான ஆளுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கோவை மாவட்டம் சந்தித்து வருகிறது.
இதுவரையில் அரசியல்வாதிகளால் எந்த காரியமும் ஆகவில்லை என்பது கொங்கு மக்களின் நம்பிக்கையாகவே உள்ளது. அரசின் ஆதரவின்றி சிறந்த தொழிலதிபர்களால் மட்டுமே இந்தப் பகுதிகள் மேம்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
வரும் 24-ம் தேதி வெளிவரும் மக்கள் நீதி மய்யத்தின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கமல்ஹாசன் போட்டியிடுவது கோவையிலா...? அல்லது ராமநாதபுரத்திலா..? என்பது தெரிய வரும்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியது...? கமல்ஹாசன் என்ன செய்ய வேண்டும்..? அவர் போட்டியிட வேண்டியது ராமநாதபுரத்திலா.. அல்லது கோவையிலா...? என்பது குறித்த உங்களது கருத்தைப் பதிவிடுங்கள்.