கோவை : மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் 2-வது நாளாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கோவை : மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் 2-வது நாளாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பொள்ளாச்சி விவகாரத்தைக் கண்டித்து கடந்த 14-ம் தேதி வடவள்ளி பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலுசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, வழக்குப்பதிவு ஆனவர்கள் யாரும் தேர்வு எழுத முடியாது என சட்டக் கல்லூரி முதல்வர் அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 2-வது நாளாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மேலும், பெண்களின் பெயர்களை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாகவும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்லூரி முதல்வர் ஒரு சார்பாக செயல்படுவதால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சட்டக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இப்போராட்டமானது மனதை உலுக்கும் சம்பவத்திற்கானது என்பதால், மாணவர்கள் மீது இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படமாட்டாது. மாணவர்கள் எதிர்வரும் காலங்களில் தடையின்றி சட்டக் கல்வியை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், மாணவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிடவில்லை. மேலும், சட்ட அமைச்சர் அல்லது சட்ட இயக்குநர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி இருந்தனர். இதைத்தொடர்ந்து, மீண்டும் கல்லூரி நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கல்லூரி முதல்வரின் கடித்தத்தை ஏற்று நேற்று மதியம் தொடங்கிய உள்ளிருப்பு போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று கைவிட்டனர்.