கோவை : கட்டாய வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் குறும்படங்கள் திரையிட்டு கோவை மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை : கட்டாய வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் குறும்படங்கள் திரையிட்டு கோவை மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் வாக்காளர்கள், வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ராசாமணி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி வைக்கப்படும் இவ்வாகனமானது, மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை வாக்குப்பதிவு நாள் வரை திரையிட்டு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அதுமட்டுமல்லாமல், உள்ளுர் கேபிள் சேனல்கள், திரையரங்குகள் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும், வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இளம் வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்றுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில், கல்லூரிகளிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையிலான கட்டுரைப் போட்டிகள், பேச்சுப்போட்டிகள், மற்றும் கவிதை போட்டிகளும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதுபோலவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்திக் காட்டும் வி.வி.பி.ஏ.டி. எனும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர் தங்களது தேர்தல் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், வாக்காளர் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், மாவட்டத்தில் 1950 எனும் கட்டணமில்லா தொலைப்பேசி சேவை செயல்பட்டு வருகின்றது.