கோவை : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் இன்றி தவித்து வரும் குருவி போன்ற சிறு பறவைகளின் தாகத்தை தணிப்பதற்காக, தற்காலிக குடிநீர் தொட்டிகளை சின்னவேடம்பட்டி குளப் பாதுகாப்பு அமைப்பினர் அமைத்துள்ளனர்.
கோவை : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் இன்றி தவித்து வரும் குருவி போன்ற சிறு பறவைகளின் தாகத்தை தணிப்பதற்காக, தற்காலிக குடிநீர் தொட்டிகளை சின்னவேடம்பட்டி குளப் பாதுகாப்பு அமைப்பினர் அமைத்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள காடுகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனங்களை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காடுகளில் தற்காலிக குடிநீர் தொட்டியை வனத்துறையினர் அமைத்து வருகின்றனர். யானை, புலி, மான் போன்ற பெரிய மிருகங்களை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நீரின்றி வறண்டு கிடக்கும் கோவை சின்னவேடம்பட்டி குளத்திற்கு வரும் குருவிகள் போன்ற சிறு பறவைகளுக்காக சின்னவேடம்பட்டி குளப் பாதுகாப்பு அமைப்பினர், சிறு பானைகள் மற்றும் ட்ரேக்களை வைத்து தண்ணீர் ஊற்றி வருகின்றனர். குளப்பகுதியில் உள்ள பழங்கள் காய்க்கும் மரங்கள் மற்றும் மரங்கள் நடவு செய்யும் பகுதிகள் என 6 இடங்களில் இந்த தற்காலிக நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் நாள்தோறும், அமைப்பின் உறுப்பினர்கள் நீர் ஊற்றி பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

சின்னவேடம்பட்டி குளப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பி.கே. செல்வராஜ் கூறுகையில், "குளக்கரையில் இருக்கும் பழங்கள் காய்க்கும் மரங்கள் சிறு பறவைகளை வரவேற்கிறது. எனவே, அவற்றிற்காக இங்கு தற்காலிக நீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளப்பகுதியில் கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 50-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இவை, மரங்களின் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரை பயன்படுகிறது," என்றார்.