கோவை : தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்தார்.
கோவை : தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்தார்.

வடகோவையில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று காலை நேரில் வந்த அவர், தி.மு.க.,வின் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக்கை சந்தித்து ஆலோசித்தார். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா. எஸ் ஜெயகுமாரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பி.ஆர்.நடராஜன் பேசியதாவது :- கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசால் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி நடவடிக்கையால் கோவையில் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வந்த பல நிறுவனங்கள் மூடப்பட்டது. பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் கொங்கு மண்டலத்திற்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதில். சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கோவையைப் பொறுத்தவரையில் மக்களின் அடிப்படை உரிமையான குடிநீரை தனியாருக்கு வழங்கும் மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம். கோவையின் போக்குவரத்து பிரச்சனைகளை சரிசெய்ய பாலங்கள் கட்டப்படும், பெங்களூருக்கு இரவு நேரத்தில் ரயில் இயக்க வலியுறுத்தப்படும். 40 ஆண்டுகளாக பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலத்தை வழங்கிவிட்டு உரிய இழப்பீட்டுக்காகப் போராடி வரும் மக்களுக்கு உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நகரமான கோவையில் மூடப்பட்ட ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதனை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவுள்ளோம், என்றார்.
பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் மற்றும் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகத்தை சந்தித்து கலந்தாலோசித்தார்.