“நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்திக்கு அழைப்பு விடுத்தார், திமுக தலைவர் கருணாநிதி. நிலையான ஆட்சி என்பது அன்று பலரது விருப்பமாக இருந்தது. ஆனால் நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்ட திமுக, அதனை கொண்டு வந்த இந்திராவோடு கை கோர்த்து ஆச்சரியப்படுத்தியது. விமர்சனம் செய்த கட்சிகளோடு தேர்தல் கூட்டணி அமைக்க கூடாது என்றால், எந்த கட்சியோடு கூட்டணி சேர முடியாது என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம். ஆம், தேர்தல் கூட்டணிகளை பெரும்பாலும் காலங்களே தீர்மானிக்கின்றன.
“நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்திக்கு அழைப்பு விடுத்தார், திமுக தலைவர் கருணாநிதி. நிலையான ஆட்சி என்பது அன்று பலரது விருப்பமாக இருந்தது. ஆனால் நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்ட திமுக, அதனை கொண்டு வந்த இந்திராவோடு கை கோர்த்து ஆச்சரியப்படுத்தியது. விமர்சனம் செய்த கட்சிகளோடு தேர்தல் கூட்டணி அமைக்க கூடாது என்றால், எந்த கட்சியோடு கூட்டணி சேர முடியாது என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம். ஆம், தேர்தல் கூட்டணிகளை பெரும்பாலும் காலங்களே தீர்மானிக்கின்றன.

சரிந்த ஜனதா கதம்பம்
ஜனதா கட்சியின் மெரார்ஜி தேசாய் பிரதமரான பின்னர், தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த அதிமுக 129 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது. இத்தனைக்கும் கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை எம்.ஜி.ஆர் கழட்டி விட்டிருந்தார். அதிமுக, சிபிஎம், முஸ்லிம் லீக் என்ற சிறிய கூட்டணியின் ஆச்சரிய வெற்றிக்கு பின்னால், எம்.ஜி.ஆர் என்ற மந்திரச்சொல் இருந்தது.

யாரை எதிர்த்து வாக்கு கேட்டார்களோ, அவர்களின் ஆதரவை பெற்று ஆட்சி நடத்திய விநோதம் நடந்தேறியது. ஜனதா கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்தது. மெரார்ஜி தேசாய், சரண்சிங், ஜெகஜீவன்ராம் ஆகியோரில் யார் பெரியவர் என்ற போட்டியும் எழுந்தது. ஒரு கட்டத்தில் சரண்சிங்கிற்கு துணை பிரதமர் பதவி கொடுத்தார், மெரார்ஜி தேசாய். இருந்தும் ஜனதா கட்சி இரண்டாக உடைந்தது. இந்திரா காந்தி ஆதரவுடன் பிரதமர் பதவி ஏற்றார், சரண்சிங். சரண்சிங் அமைச்சரவையில் அதிமுக இணைந்து, தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசில் அங்கம் வகித்த முதல் மாநில கட்சி என்ற பெருமையை பெற்றது. அதிமுகவை சேர்ந்த சத்தியவாணி முத்துவும், பாலா பழனூரும் அமைச்சர்களாகி இருந்தன.

பல கட்சிகளின் கதம்ப மாலையான ஜனதா, மூன்றே ஆண்டுகளில் சிதறியது. மக்களவை கலைக்கப்பட்டு, 1980 ம் ஆண்டு 7 வது பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஜனதா கட்சியில் இருந்த மெரார்ஜி தேசாய் அரசியலில் இருந்து ஒதுங்க, ஜெகஜீவன்ராம், வாய்பாய் உள்ளிட்டோர் ஜனதா கட்சியை வழிநடத்தினர். சரண்சிங் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார்.

கருணாநிதி VS எம்.ஜி.ஆர்
தமிழ்நாட்டு தேர்தல்களில் காங்கிரஸ், திமுக என்றிருந்த மோதல், எம்.ஜி.ஆர் பிரிவிற்கு பிறகு கருணாநிதி, எம்.ஜி.ஆர் மோதலாக மாறியது. எம்.ஜி.ஆரை எதிர்க்க வலுவான கூட்டணி தேவை என்ற அடிப்படையில், நெருக்கடி ரணங்களை மறந்து கருணாநிதி காங்கிரசோடு கூட்டணி அமைத்தார். எம்.ஜி.ஆரோ ஜனதா, சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு அதிமுக கூட்டணிக்குள் அடக்கியிருந்தார்.

“நல்ல அரசு, நிலையான அரசு. இதை காங்கிரசால் மட்டுமே தரமுடியும்” என்றார் இந்திராகாந்தி. நெருக்கடி நிலை காலத்தில் நடந்த ஆத்துமீறல்களுக்கு இந்திரா காந்தி பகிரங்க மன்னிப்பும் கேட்டார். ”தமிழ்நாட்டில் அதிமுக அரசு சிறப்பாக நடந்து வருகிறது. அதிமுகவிற்கு அதற்கு ஆதரவான ஜனதா கட்சிக்கும் வாக்களிப்பதே நல்லது” என்ற எம்.ஜி.ஆருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதர உச்ச வரம்பு சரிவை தர காத்திருந்தது. இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சலுகைகளை பெற, அவர்களின் பெற்றோர்களின் வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டுமென்ற உத்தரவே அது.

நெருக்கடி நிலையால் ஏற்பட்ட அதிருப்தி அலையில், காங்கிரஸ் அடித்து செல்லப்பட்டது. ஆனால் ஜனதா ஆட்சி மீதான அதிருப்தி, காங்கிரசை மீண்டும் கரை சேர்த்தது. எதிர்பார்த்தது போலவே மத்தியில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகவே வந்தது. ஆளும் அதிமுக வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெல்ல, மீதியிருந்தவற்றை திமுக, காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.
கோவையில் திமுகவின் முதல் வெற்றி
கோயமுத்தூர் மக்களவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் வெற்றிகளுக்கு காரணமாக இருந்த அதே கட்சி, அதே வேட்பாளர், அதே கூட்டணி என்பது இம்முறை தோல்வியை தந்தது. அதிமுக கூட்டணியில் இருந்த ஜனதா, சிபிஎம் ஆதரவும் அக்கட்சிக்கு இருந்தது.
தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. முதல் வெற்றியை ருசிக்கும் முயற்சியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பலத்தோடு போட்டியிட்டது. மக்களவை உறுப்பினராக இருந்த பார்வதி கிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் இரா.மோகன் களம் கண்டார். தேர்தல் முடிவுகள் வந்த போது, திமுக வேட்பாளர் இரா.மோகன் 2 இலட்சத்து 76 ஆயிரத்து 975 வாக்குகள் பெற்று, 56 ஆயிரத்து 109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோயமுத்தூர் மக்களவை தொகுதியின் முதல் பெண் எம்.பி.யான பார்வதி கிருஷ்ணனின், கோவை தேர்தல் கள அத்தியாம் இத்தேர்தலோடு முடிவு பெற்றது. அதேசமயம் முதன் முறையாக வெற்றி பெற்ற திமுக, அடுத்த வெற்றியை பதிவு செய்ய, பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
தொடரும்…