கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி விசாரணை கோரி அனைத்து கட்சியினர் சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி விசாரணை கோரி அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி விசாரணை கோரி அனைத்து கட்சியினர் சார்பில் பொள்ளாச்சி காந்திசிலை முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தி.மு.க., த.பெ.தி.க. மற்றும் மாதர் சங்கத்தினர் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, த.பெ.தி.க.வின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன், திருநங்கை கல்கி சுப்பிரமணியம், ம.தி.மு.க. இளைஞரணி செயலர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தின் போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், பொறுப்பற்ற எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும், பெண் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இந்த வழக்கில் நீதி விசாரணை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.