கோவை : தேவை இல்லாத அவதூறுகளை தன் மீது பரப்ப வேண்டாம் என்றும், எந்தநேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜராக தயார் என கோவையில் ஆட்சியர் அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை : தேவை இல்லாத அவதூறுகளை தன் மீது பரப்ப வேண்டாம் என்றும், எந்தநேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜராக தயார் என கோவையில் ஆட்சியர் அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இருப்பினும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பார் நாகராஜ், பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டது போன்ற வீடியோ வெளியாகியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த பார் நாகராஜ், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை, ஏற்கனவே பாலியல் வழக்கில் கைதான சதீஷ் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க பார் நாகராஜ் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோ தன்னுடையது அல்ல. செய்திகளில் நான் தலைமறைவாக இருப்பதாக ஒளிபரப்பப்படுகிறது. இதனால், எனது குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளது. நான் நடத்தி வந்த டாஸ்மாக் பாரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பே விற்று விட்டேன். மேலும், தேவை இல்லாத அவதூறுகளை என் மீது பரப்ப வேண்டாம். எந்த நேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜராக தயார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்க வந்துள்ளேன், என்றார்.
இதைத் தொடர்ந்து, பார் நாகராஜ் மற்றும் அவரது தாயார் பேபியும் தனித் தனியாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.