பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய மேலும் ஒரு பெண் இன்று புகார் அளித்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய மேலும் ஒரு பெண் இன்று புகார் அளித்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவர்களை மிரட்டி வந்த கும்பல் அண்மையில் பிடிபட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், ரிஷ்வந்த் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், இந்த வழக்கில் பல முக்கியப் புள்ளிகள், அரசியல் தலைவர்களின் தலையீடு உள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு சிலரே, புகார் அளித்துள்ள நிலையில், வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், தயங்காமல் முன் வந்து புகார் அளிக்குமாறும், புகார் அளிக்கப்படும் பெண்ணின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை நேரில் சந்தித்த இளம் பெண் ஒருவர்பாலியல் வன்கொடுமை தொடர்பாக புதிய புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் பாலா என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டு தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், அந்த நபர் தன்னை மிரட்டி, இரு சக்கர வாகனம், மொபைல் மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பாலா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.