திருப்பூர் : திருப்பூரில் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் பி.என்.ரோடு பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில், அனுப்பர்பாளையம் போலீசார், பிச்சம்பாளையம் நால்ரோட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனை நடத்தினார்கள். அப்போது , பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் சம்பந்தப்பட்ட குடோனிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டம் சோமனூரில் இருந்து புகையிலை பொருட்களை ஆம்னி வேனில் ஏற்றி வந்து குடோனில் பதுக்கி வைத்து கடை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லீலாராம், கோபால்சிங் ஆகிய 2 பேரை கைது செய்ததோடு, குடோனில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ புகையிலை பொருட்களையும், விற்பனைக்கு பயன்படுத்தி வந்த ஆம்னி வேன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.