கோவை : பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையில் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு கால்வாயில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில், இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையில் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு கால்வாயில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில், இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள கெடிமேடு என்ற பகுதியில் பி.ஏ.பி. கால்வாய் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்துள்ளது. இதனைக் கண்ட அந்த வழியில் சென்ற பொதுமக்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள், காரில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விபரம் தெரியாத நிலையில், முதலில் பெண் ஒருவரின் சடலம் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. பின்னர், மேலும் பலர் இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதில், 3 பெண்கள், 2 குழந்தைகள், ஒரு ஆண் என 6 பேரின் சடலம் தற்போது மீட்கப்பட்டது. இவர்கள், கோவை மசக்காளி பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் எனத் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள், பிரகாஷ், சித்ரா, பூஜா, சுமதி, லதா மற்றும் தரணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேபோல, இந்த கால்வாயில் கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 5 பேருடன் வந்த கார் கவிழ்ந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மிகக் குறுகலான இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடந்து கொண்டே இருப்பதால், விபத்துகள் நடக்காத வண்ணம், சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.