கோவை : பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கோவை : பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை பேரணியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து மனு அளித்தனர்.

இதன்பிறகு, அவர்கள் கூறுகையில், "கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தங்களது சொந்த செலவில் தான் இணையதள பயன்பாட்டிற்கான செலவை செய்து வருகிறோம். இதனை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். குறிப்பாக, பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்கக் கூட இடமில்லை. பட்டா மாறுதல் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மாநில அரசு தங்களது கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தப் பேரணியில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்க கோஷங்களை எழுப்பியபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
