கோவை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாக கூறி 40 -க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.
கோவை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாக கூறி 40 -க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.
கோவையில் உள்ள கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவருடைய நண்பர் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுகுணா ஆகியோர் சண்முகத்திடம் தமிழ்நாடு குடிசை மாற்று வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற பணம் கேட்டுள்ளனர்.
இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மற்றும் அரசு அலுவலகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆட்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குறுதிகளை நம்பி சண்முகம் ஜெயக்குமார் மூலம் இடைத்தரகர்கள் என்ற பெயரில் செயல்படும் குஞ்சுமோன் மற்றும் காயத்திரியிடம் கடந்த 2014 -ம் ஆண்டில் ரூ.73 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்த நோக்கத்தைக் கடன் பத்திரம் போலவும் பிராமிசரி நோட்டில் எழுதிக் கொண்டனர்.
ஆனால் ஆண்டுகள் கடந்தும் பின்னும் வீடும், கொடுத்த பணமும் கிடைக்கவில்லை . ஆகவே, சந்தேகமடைந்த சண்முகம் இவர்களைக் குறித்து விசாரித்துள்ளார். அதில் இவர்கள் பல நபர்களிடம் இது போன்ற மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சண்முகம் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் அளித்த உத்தரவின் பேரில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் குஞ்சுமோனின் மனைவி காயத்திரி (55), மணியின் மகன் ஜெயக்குமார் (48), ஜெயக்குமாரின் மனைவி சுகுணா (38), ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தலைமறைவாக இருந்த இருவரை காவல்துறை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, தற்போது செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மூசாவின் மகன் குஞ்சுமோன் (59), அதேபோல அதே பகுதியைச் சேர்ந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசில் செயல்பட்டு வரும் துளசிதாஸின் மகன் ஷாஜி (37) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.