தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதையடுத்து, போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த ஆணையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில், ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து, ஆலையை ஆய்வு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இந்த தகவல்களை ஆய்ந்து அறிந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலையில் இருந்து வெளியேறு கழிவுகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.