டெல்லி : ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
டெல்லி : ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
ரூபாய் விலை வீழ்ச்சியை சமாளிப்பது, பொதுத்துறை வங்கிகளை முறைப்படுத்துவது, வட்டி விகித நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால், கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறிய அவர், தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி விலகியதையடுத்து உர்ஜித் படேல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராகப் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உர்ஜித் படேலின் பதவி ராஜினாமா குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். "ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித் துறைக்கு பெரிய இழப்பாகும். ரிசர்வ் வங்கியில் நிதி நிலைத் தன்மையை ஏற்படுத்தியவர் உர்ஜித் படேல். தொலைநோக்கு பார்வை கொண்ட மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் உர்ஜித் படேல்," இவ்வாறு புகழாராம் சூட்டியுள்ளார்.