கோவை : பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில், மூளைச் சாவடைந்த உடற்பயிற்சி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோவை : பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில், மூளைச் சாவடைந்த உடற்பயிற்சி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் எஸ். ஆனந்தகுமார் (51) என்பவர், கடந்த 07-ம் தேதி காலை 9 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தார். பெத்தநாய்க்கனுர் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், நேற்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி சாந்தி, சகோதரர் சக்திவேல் ஆகியோர் எஸ். ஆனந்தகுமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து, அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வு, நுரையீரல், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதய வால்வு மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கண்கள், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிச்சாமி கூறுகையில், "மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால், அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய எஸ். ஆனந்தகுமார் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.