திருப்பூர் : மடத்துக்குளம் அருகே அமராவதி சர்க்கரை ஆலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 6 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து குடும்பத்தினர் அலுவலகத்தை பூட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் : மடத்துக்குளம் அருகே அமராவதி சர்க்கரை ஆலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 6 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து குடும்பத்தினர் அலுவலகத்தை பூட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் 270 பேருக்கு, கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்காமல் இருப்பதைக் கண்டித்து ஊழியர்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்க்கரை ஆலைக்கு வந்த ஊழியர்கள் ஆலைமுன் தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அலுவலகத்தைப் பூட்டி விட்டு அதிகாரிகள் யாரையும் பணி செய்ய விடாமல் உள்ளே அனுமதிக்காமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலை நிர்வாகம் செவிசாய்க்காவிட்டால் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஊதியம் வழங்காத காரணத்தால் குழந்தைகளுக்குப் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை. குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், உணவுக்குக் கூட பொருட்கள் வாங்க முடியாத நிலையை ஆலை நிர்வாகம் உருவாக்கி விட்டதால், முழுமையாக 6 மாத ஊதியம் வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆலையில் கரும்பு கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் மொலாசீஸ் மூலம் ரூ. 30 கோடிக்கு அதிகமாக வருமானம் கிடைக்கப்பெறும் நிலையிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். ஓரிரு நாளில் 6 மாத ஊதியத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆலையில் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டு, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடுமையான வழியில் போராட்டத்தை தொடரப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஊழியர்களின் இந்தத் தொடர் போராட்டத்தால் ஆலை இயக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.