நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய திராவிட கழக மாநில பொருளாளர் பிறைநுதல் செல்வி உயிரிழந்தார்.
நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய திராவிட கழக மாநில பொருளாளர் பிறைநுதல் செல்வி உயிரிழந்தார்.
குன்னூர் ரெய்லிகாம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் கவுதமன். இவரது மனைவி டாக்டர் பிறைநுதல்செல்வி (72). இவர்களுக்கு இனியன் என்ற மகனும், யாழிசை என்ற மகளும் உள்ளனர். டாக்டர் பிறைநுதல்செல்வி திராவிடர் கழகத்தின் மாநில பொருளாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது கணவருடன், பிறைநுதல்செல்வியும் திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்னை சென்றனர். விழாவை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து திருப்பூருக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தனர்.
பின்னர், இன்று காலை திருப்பூரிலிருந்து கார் மூலமாக குன்னூர் வந்து கொண்டு இருந்தனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகே கார் வந்த போது எதிரே உதகையிலிருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று திடீரென்று மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாததால், சமரசமாக இருதரப்பினரும் சமாதானமாக சென்றனர். இந்த விபத்தின் போது, பிறைநுதல்செல்வி காரில் பெல்ட் போட்டு வந்ததால், கார் மோதிய வேகத்தில் அதன் கொக்கி வயிற்றில் பட்டுள்ளது. இதனால், அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்தால் உடனடியாக சிகிச்சைக்காக குன்னூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மரணமடைந்த திராவிட கழக மாநில பொருளாளர் பிறைநுதல் செல்வியின் சொந்த ஊர் ஈரோடு ஆகும். இவரது தகப்பனார் சுப்ரமணியம், தாய் சிங்காரம்மாள். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி பிறந்த இவர், பி.எஸ்.சி. முடித்துவிட்டு எம்.பி.பி.எஸ். டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பின்னர், மகப்பேறு மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்றார். இவர், 22 ஆண்டுகளாக குன்னுார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார். பின்னர், கோத்தகிரி தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட சுகாதார இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது கணவர் கவுதமன் குன்னுார் அரசு மருத்துவமனையில் முக அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். அதன்பின்னர், உதகை அரசு மருத்துவமனையில் பல்பிரிவில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.