கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசுடன் ஈஷா அறக்கட்டளை கரம்கோர்க்க உள்ளது.
கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசுடன் ஈஷா அறக்கட்டளை கரம்கோர்க்க உள்ளது.
கடந்த நவ.16-ம் தேதி தாக்கிய கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வீடு, மரங்கள், பயிர்கள் மற்றும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, அங்குள்ள மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக ஈஷா அறக்கட்டளை சார்பில் 3 நடமாடும் மருத்துவ வாகனங்கள் விரைந்து அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் மருத்துவர்கள், செவிலியர்கள், ஈஷா தன்னார்வ தொண்டர்கள் அடங்கிய குழுக்களும் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர்.

புயலால் அதிகம் பாதிப்புகளை சந்தித்துள்ள வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட 63 கிராமங்களில் ஈஷா நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது. 44 நிவாரண முகாம்களிலும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் தற்போது மருத்துவ நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈஷா அறக்கட்டளை சார்பில் இதுவரை சுமார் 6,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில் காய்ச்சல், சளி, இருமல், சுவாச கோளாறு, கை மற்றும் கால்களில் தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈஷா மருத்துவர்கள் மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர். நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் கிராமங்களுக்கு நேரடியாக செல்வது மட்டுமின்றி நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் விதமாக ஏராளமான கிராமங்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மருத்துவ நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளில் ஈஷா அறக்கட்டளையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசுடன் ஈஷா அறக்கட்டளை கரம்கோர்க்க உள்ளது.