கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பராமரிப்பு குறைபாடுகள் இருந்தது குறித்து சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனை முதல்வரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பராமரிப்பு குறைபாடுகள் இருந்தது குறித்து சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனை முதல்வரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் பலர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கடந்த 4-ம் தேதி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் மருத்துவமனையின் காய்ச்சல் வார்டுகள் உள்ளிட்ட அனைத்து வார்டுகளையும் பார்வையிட்டனர்.
அப்போது, மருத்துவமனையில் சுகாதார வசதியில்லாமல், பராமரிப்பு குறைபாடுகளோடு இருந்தது தெரிய வந்தது. குறிப்பாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல வார்டு, காய்ச்சல் வார்டு உள்ளிட்ட வார்டுகள் மோசமான நிலையில் காட்சியளிப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனையின் முதல்வர் அசோகன் உள்ளிட்ட மருத்துவர்களைக் கடிந்து கொண்டார்.
இதையடுத்து, சுகாதார பணிகளை சரியாகச் செய்யாத தனியார் காண்டிராக்ட்டர் 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து அமைச்சர் மருத்துவமனை நிர்வாகத்திடம், "தமிழக முதல்வர் மருத்துவக்காப்பீட்டு திட்ட நிதியில் இருந்து எவ்வளவு நிதி பெறப்பட்டு மருத்துவமனையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது? " என கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் முறையான பதில் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் மருத்துவ கல்வி இயக்குனரகம், மருத்துவமனையின் டீன் அசோகன் சுகாதாரக் குறைபாடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறுகையில், "அமைச்சர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது மருத்துவமனை பராமரிப்பு குறைபாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, மருத்துவமனையில் சுகாதாரக் குறைபாடுகளுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளோம்," என்றார்