கோவை அரசு பள்ளியில் தென்படும் சாதிய ஒடுக்குமுறை : மாணவர்களை சாதியை கூறி திட்டும் ஆசிரியை

கோவை : மாணவர்களுக்கு பகுத்தறிவை புகட்டும் இடமான பள்ளியில் மாணவரை சாதியைக் கூறி திட்டிய ஆசிரியர் மீது புகார் அளித்தும், கண்துடைப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்ட சம்பவம் கோவையில் சக மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மாணவர்களுக்கு பகுத்தறிவை புகட்டும் இடமான பள்ளியில் மாணவரை சாதியைக் கூறி திட்டிய ஆசிரியர் மீது புகார் அளித்தும், கண்துடைப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்ட சம்பவம் கோவையில் சக மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 



சற்றே ஓய்ந்திருந்த சாதிய ஒடுக்குமுறைகள் சமுதாயம் எங்கும் தற்போது தலைதூக்கி வருகின்றது. சாதி மறுப்பு திருமணம் செய்தவரை, பள்ளி மாணவர்கள் வெட்டிக் கொன்ற அவல சம்பவம் வரை பார்த்துவிட்ட தமிழ் சமூகம், இன்னமும் அதனை விட்டபாடில்லை. கல்லூரி மாணவர்கள் சந்திக்கும் சாதி ரீதியான ஒடுக்குமுறைகளை சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் சமுதாயத்தின் சவட்டில் அடி கொடுத்து தெரியப்படுத்தியது.

இருந்த போதும், சாதியை கவுரவம் என்று எண்ணிச் சுமக்கும், கூட்டம் சேர்த்து அரசியல் செய்ய நினைக்கும் பலர் சாதிக்கு 'குட்பாய்' சொல்வதாய் இல்லை. அவர்களுக்கு சட்டம் தக்கநேரத்தில் தண்டனை கொடுக்கிறது. சிலரை தப்பிக்கவும் வைத்து விடுகிறது. 

திருப்பூர் அருகே தலித் பெண் ஒருவர் பள்ளி சமையலராக இருக்கக் கூடாது என்று கிளம்பிய கூட்டம் இன்று கம்பி எண்ணிக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சூழலில், பள்ளி மாணவர் ஒருவரை, ஆசிரியர் சாதி ரீதியாக கொடுமைப்படுத்திய சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் இருக்கும் கிணத்துக்கடவு பகுதி கோவில்பாளையத்தை அடுத்த காகியண்ணன் புதூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர் அருண். இவரது வகுப்பு ஆசிரியராக இருந்தவர் ஜமுனேஷ்வரி. மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த இவர் பள்ளி மாணவர்களிடையே சாதி பார்த்தே பழக்கத்தை வைத்துக் கொள்வதாக பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர். 



இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் மாதம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அருண் மூன்று நாட்களுக்குப் பள்ளிக்கு விடுப்பு எடுத்தார். இதனால், அந்த மாணவரிடம் கடிந்து கொண்ட ஆசிரியை ஜமுனேஷ்வரி, "உனக்கெல்லாம் எதுக்குடா படிப்பு..?" என்று சாதியை பெயரை சேர்த்து இழிவாகப் பேசியுள்ளார். மேலும், "நீ மாடு மேய்க்கவோ, கக்கூஸ் கழுவவோ போ" என்று சக மாணவர்கள் மத்தியில் அருணின் மனதை கலங்கடித்துள்ளார்.

இதன்மூலம், தொழில் ஒன்றைக் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது திணிப்பதை அந்த மாணவர்கள் மனதில் அப்போதே விதைத்துவிட்டார் அந்த ஆசிரியை. வருங்கால சமுதாயத்தை அறிவோடு வளர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு கொண்ட ஆசிரியையின் இந்த செயல் மற்ற மாணவர்களையும் வேதனை கொள்ளச் செய்தது. 

இது தொடர்பாக, அருண் சார்பில் பள்ளி மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், சமீபத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி, ஜமுனேஷ்வரியை வேறு வகுப்புக்கு மாற்ற தலைமையாசிரியருக்கு உத்தரவிட்டார்.

புறக்கணிக்கப்பட்ட வகுப்பு : 

இதற்கு பிறகு தான் பிரச்சனை மேலும் தலைதூக்க ஆரம்பித்தது. அந்த வகுப்பிற்கு மட்டும் எந்த ஆசிரியரும் பாடம் எடுக்கச் செல்லவில்லை. மாறாக பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்பட்டது. "புகாரா கொடுக்குறீங்க..? இனி யார் பாடம் எடுப்பான்னு பாருங்க?" என்ற மிதப்பில் சக ஆசிரியர்களும் கும்பலாக சேர்ந்து மாணவர்களுக்கு எதிராக செயல்பட தொடங்கினர். இதில், ஜமுனேஷ்வரி சிறிது நாட்கள் விடுமுறையிலும் சென்றுவிட்டார்.

சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட அருண், இனி பள்ளிக்குச் செல்லவே வேண்டாம் என்று முடிவை எடுத்துவிட்டார். கொடுமையிலும் கொடுமையாய், இந்தப் பிரச்சனை பற்றி வெளியே பேசவும் அஞ்சுகிறார். அடிப்படை உரிமைகளை இழந்த அந்த மாணவரின் உரிமையை நிலைநாட்ட அந்த ஊர் மக்கள் சிலர் முடிவு செய்தனர்.

மீண்டும் புகார் :

அதன்பேரில், தமிழ் புலிகள் என்ற கட்சியினரின் உதவியோடு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் ஒரு புகார் அளித்தனர். ஆனால், சம்மந்தப்பட்ட மாணவரும், அவர் சார்பாக பெற்றோரும் வரவில்லை. பயந்து ஒடுங்கி வீட்டிலேயே கிடப்பதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர். இத்தனை கொடுமைகளையும் அறிந்தும், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவு, தற்போது வரை 10-ம் வகுப்பு 'ஆ' பிரிவுக்கு எந்த ஆசிரியரும் சென்று பாடம் நடத்துவதில்லை.



இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னக்கண்ணு-விடம் கேட்டோம், "இந்தப் பள்ளி ரொம்ப நல்ல பள்ளி. எந்தப் புகார் என்றாலும் என்னிடம் சொன்னால் உடனே நடவடிக்கை எடுத்திருப்பேன். இப்போதும் அந்த மாணவனிடம் விசாரித்து கொண்டு தான் இருக்கிறோம். அதிகாரிகள் வந்தும் விசாரணை நடத்திச் சென்றனர்," என்றார்.

கேள்வி : ஆசிரியை சாதி ரீதியாக மாணவரைக் கொடுமைப்படுத்தியது உண்மை தானா..? 

பதில் : "மாணவன் எதற்காக அப்படி கூறுகின்றார் என்று தெரியவில்லை. அந்த ஆசிரியையிடம் விசாரித்தோம், அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார்."

கேள்வி : வகுப்பில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் இது குறித்து புகார் தெரிவிக்கின்றனரே..? என்றோம்.

மழுப்பலான பதிலுடன் பேச்சை நிறுத்திவிட்டார் அவர்.

மாணவர் மீது சாதிய வன்மத்தை திணிக்கும் ஜமுனேஷ்வரி போன்ற ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், கண்துடைப்புக்கு வகுப்பை மட்டும் மாற்றியுள்ளனர்.

இந்தப் பிரச்சனை மட்டுமல்லாது 10-ம் வகுப்பு 'ஆ' பிரிவுக்கு ஆசிரியரும் இல்லாத அவலம் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை முறையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் கண்காணிக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...