கோவை : உடல் உறுப்பு தானத்தில் தமிழக அரசு தொடர்ந்து 4-வது முறையாக முதலிடம் பிடித்துள்ள நிலையில், கோவை அரசு மருத்துவமனை மூலம் உறுப்பு தானம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.
கோவை : உடல் உறுப்பு தானத்தில் தமிழக அரசு தொடர்ந்து 4-வது முறையாக முதலிடம் பிடித்துள்ள நிலையில், கோவை அரசு மருத்துவமனை மூலம் உறுப்பு தானம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று 9-வது உடல் உறுப்பு தான விழா நடைபெற்றது. இதில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பெற்றமைக்கான விருதை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். இந்த விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வின் குமார் வழங்கினார்.
கடந்த 12.12.2014-ல் உருவாக்கப்பட்ட டிரான்ஸ்பிளாண்ட் என்ற அமைப்பு நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல், அறிவியல் ரீதியாகவும் செம்மையாக செயல்பட்டதின் அடையாளமாக இதுவரை தமிழகத்தில் 1,198 கொடையாளர்களிடமிருந்து, 6,886 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை மூலம் உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதேபோல, தமிழகம் தொடர்ந்து 4-வது முறையாக தேசிய அளவில் முன்னிலையில் இருப்பது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
மேலும், கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 3 பேர் கங்கா மருத்துவமனை மூலம் தோல் தானம் செய்துள்ளனர். அதேபோல, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து நேற்று வரை 11 பேர் கண் தானம் செய்துள்ளனர். மேலும், சிறுநீரக தானமானது தங்கள் உறவினர்களுக்காக (live transplant) உயிரோடு இருக்கும்போதே 19 பேர் வரை தானம் செய்துள்ளனர். இப்படி கோவை அரசு மருத்துவமனையின் மூலம் உடல் உறுப்பு தானம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் பொதுமக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது, உடல் உறுப்பு தானங்கள் செய்யும் கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் கூறியதாவது :- தற்போதுள்ள இயற்கை சூழல்களாலும் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளாலும் சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால். சிறுநீரகம் வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் உடல் உறுப்புகள் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்ட அரசு மருத்துவமனை சார்பில் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இன்னும் விழிப்புணர்வுகளை அதிகரிக்கத் தொடர்ந்து செயல்படுவோம்.
அதேபோல, இதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளோம். விரைவில் உரிமம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேசமயம், தமிழக அரசு தொடர்ந்து நான்காவது முறையாக உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் வகிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது, என்றார்.