கோவை : கோவை உணவகங்களில் சுகாதாரமின்றி உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்ததையொட்டி நேற்று மாலை உணவங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவை : கோவை உணவகங்களில் சுகாதாரமின்றி உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்ததையொட்டி நேற்று மாலை உணவங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரில் உள்ள உணவகங்களில் சுகாதாரமின்றி உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வில் ஈடுபட்டனர்.

நேற்று நடைபெற்ற அவ்வாய்வினை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மொத்தம் 7 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவக உரிமையாளர்களுக்குச் சுகாதாரம் குறித்து அறிவுரை வழங்கினர்.
மேலும், சுகாதாரமின்றி உணவகம் நடத்தி வந்த 4 உணவகங்களுக்கு இன்ஸ்பெக்சன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நாளிலிருந்து 14 நாட்களுக்குள் சுகாதாரத்தை சரி செய்யவில்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகளில், "உணவகங்களில் உள்ள சமையலறையின் உட்பகுதி சுகாதாரமின்றி இருப்பதைச் சரி செய்வது, அதேபோல சமையலர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் சுயசுத்தமாக இருப்பது, சமைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை முறையாக மூடி வைப்பது, கொதிக்க வைத்த தூய நீரையே பொது மக்களுக்குத் தருவது, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது" போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆண்டவர் உணவகம், கஸ்தூரி பவன், வசந்த் பவன் மற்றும் தன்யா உணவகம் ஆகியவற்றில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.