திருப்பூர்: அலகுமலையில் தீண்டாமை வேலி இடத்தை ஆய்வு செய்ய வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் குறைகளைக் கேட்பதில் பாரபட்சமாக நடந்துகொண்டதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .
திருப்பூர்: அலகுமலையில் தீண்டாமை வேலி இடத்தை ஆய்வு செய்ய வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் குறைகளைக் கேட்பதில் பாரபட்சமாக நடந்துகொண்டதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் கடந்தமாதம் தாழ்த்தப்பட்ட மக்களின் பொது வழித்தடத்தை மறித்து ஒரு தரப்பினர் கம்பிவேலி அமைத்திருந்தனர் . இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் தீண்டாமை வேலியின் ஒரு பகுதி அகற்றப்பட்டது .

இதனையடுத்து, கடந்த 23-ம் தேதி அப்பகுதியில் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொள்வது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும், இருதரப்பினரிடமும் முறையாகக் கருத்துக்களை கேட்க வேண்டிய அவர் கம்பி வேலி அமைத்த தரப்பினரை மட்டும் கோவிலுக்குள் அமரவைத்து ஆலோசனை நடத்தியதோடு அல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலோசனைக்கூட்டத்திற்கு அனுமதிக்காமல் பாரபட்சமாக நடந்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுவழித்தடமாக பயன்படுத்தி வந்த இடம் அறநிலையத்துறைக்குச் சொந்தமில்லாத நிலையில், முன்னர் அமைத்த கம்பி வேலி அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் இரும்பு கேட் அமைக்கமுயற்சி மேற்கொள்ளப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், மனு அளிக்க வந்த பொதுமக்களை காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அனுமதிக்காததால் பொதுமக்கள் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.