கோவை : வரும் ஜனவரி 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11-வது கோவை விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை : வரும் ஜனவரி 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11-வது கோவை விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் இன்று தனது 214-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. இதனை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த யூத் இந்தியன்ஸ், கொடிசியா, இந்திய வர்த்தக சம்மேளனம், சி.ஐ.ஐ., கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இணைந்து 11-வது கோவை விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். கோவை விக்டோரியா அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வரும் ஜனவரி 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் கோவை விழாவைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

"11-வது கோவை விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். கோவையின் தனிச்சிறப்பை போற்றும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விழா யூத் இந்தியன்ஸினரால் கொண்டாடப்பட்டு வந்தது. குறிப்பாக இரண்டடுக்கு பேருந்து, ஓவியம் மற்றும் உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், பாரம்பரிய கார் திருவிழாவும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும், அமைப்புகளும் தனித் தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ கோவை விழாவை, அவர்களுக்கு ஏற்றாற்போல கொண்டாட வேண்டும்," இவ்வாறு கூறினார் யூத் இந்தியன்ஸைச் சேர்ந்தவரும், 11-வது கோவை விழாவின் தலைவருமான விஷ்ணு பிரபாகர்.
இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது :- கோவை விழாவையொட்டி, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டடுக்கு பேருந்து கோவை மக்களைப் பெரிதும் கவர்ந்தது. ஆண்டுதோறும், ஒவ்வொரு தொழில் கூட்டமைப்பினரும் அரசுக்கு ரூ. 15 லட்சம் வாடகையாக செலுத்தி வருகின்றனர். அவர்கள் இடத்தில் இருந்து தலா ரூ. 1 லட்சம் வாங்கினால், இரண்டடுக்கு பேருந்தை சொந்தமாகவே வாங்கி விடலாம். அதனை ஆண்டு முழுவதும் மாநகர் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கலாம். மேலும், இந்த கோவை விழாவில், நமது தாய்மொழியை பேசுவதற்குப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், கோவை தமிழ் தனிச்சிறப்பு வாய்ந்தது, என்றார்.

கோவை விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் கூறுகையில், "நான் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும், கோவை மாவட்டம் எனக்கு சொந்த ஊர் போன்ற உணர்வை அளிக்கிறது. கோவை விழாவை எந்த வழிகளில் கொண்டாடினாலும், அதற்கு இந்திய விமானநிலைய அதிகாரச் சபை முழு ஆதரவு அளிக்கும்," எனக் கூறினார்.
மேலும், ஜனவரி 4-ம் தேதி தொடங்கும் இந்த கோவை விழா கொண்டாட்டத்தின் போது, ஓதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் கோவையைச் சேர்ந்த கலாச்சார அமைப்புகளின் நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, சி.ஐ.ஐ. தலைவர் ரமேஷ், யூத் இந்தியன்ஸ் தலைவர் தீபேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், 9 நாட்கள் நடக்கும் இந்தக் கோவை விழாவில் 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.