கோவை : கொலை முயற்சி வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இளைஞரை கோவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கொலை முயற்சி வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இளைஞரை கோவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கம் பகுதி காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார். மேலும், நீதிபதியின் உத்தரவின் பேரில், கோவை நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டு வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல கையெழுத்து போடுவதற்காக சூர்யா இன்று கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு தப்பி ஓடினர். இதில், அவருக்கு தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், உடனடியாக அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியால் பலத்த காயமடைந்த சூர்யா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் போது, தீபக், சச்சின் மற்றும் ஃபெலிக்ஸ் ஆகியோர் தான் தன்னை கத்தியால் குத்தியதாக பாதிக்கப்பட்ட சூர்யா வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில், அந்த 3 பேரையும் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.