கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக கருதப்படும் வெள்ளியங்கிரி காடுகளில் சில ஆண்டுகளாக வனத்துறையின் அனுமதியின்றி கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார்.
அவர் தொடுத்த வழக்கின் சாரம் இதுதான் :- அரசியல்வாதிகள் சிலர் மக்களிடம் இந்த பண்டிகைக்காக கட்டாயமாகப் பணம் வசூல் செய்கின்றனர். மேலும், கட்சி சார்ந்து செயல்படும் அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அனுமதியில்லாமல் காடுகளுக்குள் சென்று தங்கி வருகிறார்கள். எளிதில் தீ விபத்து ஏற்படக்கூடிய வனப்பகுதியில் விளக்குகள் ஏற்றும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும், என்பதே ஆகும்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வனத்துறை சார்பில் வாதிடப்பட்டது. அதாவது, "வெள்ளியங்கிரி காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அங்கு விளக்கு தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதி இல்லை. ஆனால், மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லலாம்" என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மக்களை ஏன் அனுமதித்தீர்கள்..? என நீதிமன்றம் பதில் கேள்வி எழுப்பியது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட்டு, வழக்கை வேறு தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.