கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இறந்த உடலை பூனை கடிப்பது போன்ற காட்சி வெளியாகியதற்கு கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் நாய், பூனை போன்றவற்றை பிடிக்க மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இறந்த உடலை பூனை கடிப்பது போன்ற காட்சி வெளியாகியதற்கு கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் நாய், பூனை போன்றவற்றை பிடிக்க மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நோயாளியின் உடலை பூனை கடித்தது குறித்த வீடியோக்கள் வெளியாகின. மேலும் ஆதரவற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை போன்ற புகார்களும் எழுந்துள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை பூனை கடித்தது என்ற புகார் வெளியானது முற்றிலும் தவறானது. அப்படி இதுவரைக்கும் பொதுமக்கள் சார்பில் எந்தவிதமான புகாரும் வரவில்லை. அதேபோல மருத்துவமனை வளாகத்தில் ஒரு சில பூனைகள் மற்றும் நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றை பிடிக்க மாநகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் நாய்களை பிடித்து சென்றுள்ளனர். நேற்று பூனை கடித்தாக கூறும் பெண்மணி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இரண்டு கால்களில் புண்களுடன் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டவர். இந்தப் பெண்மணியை ஆம்பூலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு சென்றுள்ளார்.
மேலும், அவருக்கான முறையான சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு தான் வந்தது. குறிப்பாக உடை கூட இல்லாமல் மருத்துவமனைக்கு ஆதரவுற்ற நிலையில் வந்தார். நேற்றிரவு 8.30 மணியளவில் காயங்களுக்கு கட்டு போடப்பட்டது. மேலும், உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இரவு 9.45 மணியளவில் உயிரிழந்தார்,
அதன் பின்னர் நோயாளி பிரிவில் இருந்து10.30 மணிக்கு பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பூனைகள் யாரையும் கடிக்கவில்லை. மருத்துவமனை வளாகத்தில் செல்போன் உபயோகிப்பதால் வீண் வதந்திகள் பரவுகின்றன, வளாகத்தில் செல்போன் உபோயகிப்பதை தவிர்க்க வலியுறுத்த உள்ளோம். ஆதரவற்ற நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக கூறும் கருத்து தவறானது.
அனைவருக்கும் சிகிச்சை சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். ஆதரவற்றோர்க்கு என தனி பிரிவு கோவை அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.