கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குக் கோவை மாநகராட்சியின் சார்பில் 62,500 லிட்டர் குடிநீர், 21 ஆயிரம் லிட்டர் குளோரின் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குக் கோவை மாநகராட்சியின் சார்பில் 62,500 லிட்டர் குடிநீர், 21 ஆயிரம் லிட்டர் குளோரின் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:- கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நோய் தொற்று பாதிப்புகளை தடுக்க கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் 350 கேன் லிக்யூட் வடிவிலான குளோரின் மருந்து அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு கேன் 60 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 130 கேன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 116 கேன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 110 கேன் என குளோரின் மருந்து பிரிந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கக் கிணறு, குடிநீர் தொட்டிகள், நீரேற்றம் செய்யப்படும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள தண்ணீரில் இந்த மருந்து கலக்கலாம். 1,000 லிட்டர் நீருக்கு 20 மில்லி என்ற அளவில் இந்த குளோரின் மருந்து கலக்க வேண்டும்.
அதேபோல், பட்டுக்கோட்டைக்கு 10 எண்ணிக்கையிலான மரம் அறுக்கும் இயந்திரங்கள், குடிநீர் விநியோகிக்கும் பகுதிக்கு பயன்படுத்தப்படும் 5 ஜெனரேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலா 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 எண்ணிக்கையிலான குடிநீர் லாரிகள் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தலா ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் கேன் என மொத்தம் 2,500 குடிநீர் கேன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொருட்கள் தொடர்ந்து மாநகராட்சியால் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.