திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த மாணவர்கள் தரையில் அமர்த்தி வைக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த மாணவர்கள் தரையில் அமர்த்தி வைக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 41 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ. 24,000 வீதம் மொத்தம் ரூ. 9,84,000-க்கான காசோலையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காங்கயம் பகுதியைச் சேர்ந்த 3 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 வீதம் மொத்தம் ரூ. 36,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.10,02,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வழங்கினார்.
இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் ராகவேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 41 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவைக்கப்பட்டு, இ-சேவைமையம் அருகில் தரையில் அமர்த்தி வைக்கப்பட்டனர். இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களை மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகள் அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் நிலையில், பயனாளிகள் அமருவதற்கான இருக்கைகள் கூட இல்லாத வறட்சி நிலவுகிறதா..? அல்லது அதிகாரிகளின் மெத்தனப் போக்கா..? என பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.